வவுனியா ஓமந்தைப் பிள்ளையார் கோயிலில் புத்தருக்கு கோயில் கட்டவேண்டும். எனவே புனரமைப்பு பணிகளை கைவிடுங்கள் என்று இராணுவத்தினர், நிர்வாகத்தினரைத் தடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 16 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்யும் பொருட்டு ஓமந்தை பிள்ளையார் கோயில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது வசந்த மண்டபம், தீர்த்தக் கேணி என்பன அமைக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்துக்கு சென்ற இராணுவத்தினர், ஆலயக் காணி தங்களுக்கு உரியது என்றும் அதில் தாம் புத்த கோயில் கட்டப்போகிறோம், நீங்கள் புனரமைப்பு பணிகளைக் கைவிடுங்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.
எனினும் ஓமந்தைப் பிள்ளையார் கோயில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்தது என்று கூறிய ஆலய நிர்வாகத்தினர், இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.