Ad Widget

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி – அஸ்கிரிய பீடம்

நாட்டில் நிலவும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

மகா சங்கத்தினரிடம் எழுத்து மூலம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்ததார்.

நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் துரிதமாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான்கு மகா சங்கத்தினரால் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்தோடு தற்போது செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி எவ்வித பதிலையும் வழங்காமலிருப்பது கவலையளிப்பதாகவும் , இந்த விடயங்கள் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தாது செயற்பட்டால் நான்கு பீடங்களும் ஒன்று கூடி சங்க மஹா பிரகடணத்தை நாட்டிற்கு அறிவிப்பதாகவும் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்ததாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

Related Posts