Ad Widget

இடர்கள் வந்தாலும் மண்ணின் வாசனை மாறாமல் வாழ்க்கை நடத்த முடியும் – எஸ்.சிறிதரன்

நாங்கள் அறநெறி பண்பாடுகளிலும் மொழி, கலாசார விழுமியங்களிலும் நல்லதொரு அத்திபாரத்தை பெற்றுள்ளோம். இதன் விளைவாக எத்தகைய இடர்கள் வந்தபோதும் இந்த மண்ணின் வாசனை மாறாமல் எங்களால் வாழக்கை நடத்த முடிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வடமராட்சி, கரவெட்டி விக்னேஸ்வரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி, அதிபர் ம.மகாகேதீஸ்வரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் புதன்கிழமை (11) நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கல்வி புலமைக்கு பெயர்பெற்ற மண்ணில் நாளைய சாதனையாளர்களின் மத்தியில் ஒரு பொழுது கிடைத்தது மகிழ்ச்சி தருகின்றது. இந்த ஊரின் மக்களும் அறநெறிப் பண்பாடுகளிலும் மொழி, கலாசார விழுமியங்களிலும் நல்லதொரு அத்திபாரத்தை பெற்றுள்ளதால் எத்தகைய இடர்கள் வந்தபோதும் இந்த மண்ணின் வாசனை மாறாமல் வாழக்கை நடத்துவதை நாம் அவதானிக்க முடியும்’ என்றார்.

‘அமரர்களை நினைவுகொள்வதிலும் புலமைகளை போற்றுவதிலும் பின்பற்றுவதிலும் இந்த மண்ணுக்கு அதிக மதிப்புண்டு. அந்த வழியில் இந்த சிறார்களும் வளர்த்தெடுக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.

மீனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க தேவையில்லை என்பதை போல, இந்த மண்ணின் சிறார்களுக்கும் இயல்பாகவே சில குணங்கள் வழிவழியாய் கடத்தப்பட்டிருக்கின்றது’ என்றும் அவர் கூறினார்.

Related Posts