Ad Widget

இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து போராட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய ஐந்து பேரது இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய வேளையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் ஒன்று திரண்டு மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணையில் இருந்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சு வரை நடைபவனியாக சென்று சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று அங்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு வடக்கு மாகாண சுகாதார அமைச்சரையும் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்து தமது பிரச்சினைகளை விரிவாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன், இந்தப் பிரச்சினை இரண்டு திணைக்களங்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் இதனை தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது எனவும், எனினும் இப்பிரச்சினையை சுமுகமாக, சமாதானமான முறையில் தீர்க்கவே தான் முனைவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு தனக்கு கால அவகாசம் தருமாறும், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களிடம் வடக்கு சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

Related Posts