Ad Widget

ஆவா குழுவின் தலைவருக்கு தொடர் விளக்கமறியல்

judgement_court_pinaiயாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ. சிவகுமார் இன்று (28) உத்தரவிட்டார்.

யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் ஆவா (அதன் தலைவர் ஆவா வினோதன் உட்பட) குழுவைச் சேர்ந்த 13 பேர் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 11 பேர் யாழ். நீதிமன்றத்தினாலும், அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 2 பேர் மல்லாகம் நீதிமன்றத்தினாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி மேற்படி வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி குழுவிற்கு பிணை வழங்கும்படி அந்தக் குழு சார்பாக மன்றில் ஆஜராகியிலிருந்த சட்டத்தரணிகள், நீதிபதியிடம் கோரியிருந்தனர்.

இதுதொடர்பாக கோப்பாய் பொலிஸார் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் அந்தக்குழுவின் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் நீதிபதி பிணையில் விடுவித்ததுடன் மிகுதி 3 பேரும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் பெப்ரவரி 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கு கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மூவரில் இருவர் தலா 5 இலட்சம் பெறுமதியான மூன்று சரீரப்பிணையில் செல்ல நீதிபதி அனுமதியளித்ததுடன், குழுவின் தலைவரினை எதிர்வரும் 28ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்படி வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆவா குழுவின் தலைவரை மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அச்சுவேலிப் பொலிஸாரினால் ஜனவரி 6ஆம் திகதி கைது செய்யப்பட்ட இருவரும் ஜனவரி 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட மேலும் மூவருமாக மொத்தம் ஐந்து பேரும், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பஷிர் மொஹமட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts