Ad Widget

ஆளுநரை மாற்றுவதே மக்களின் விருப்பம் – யாழ்.ஆயர்

வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக்கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.

இச்சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை, ஆளுநர் பதவியில் இருந்து மாற்றாமல் தொடர்ந்து அவரை இரண்டாவது தடவையாக நியமித்து வடமாகாண சபையின் செயற்பாடுகளை செய்யவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக அவருக்கு எடுத்துக்கூறினேன்.

தமிழ் மக்கள் மத்தியில் திருப்பம் ஒன்று கட்டாயம் வேண்டும். தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

வடமாகாண சபைக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரும் தன்னிடம் எடுத்துக் கூறியதாகவும் அன்ரு மன், தனக்கு தெரிவித்ததாக ஆயர் தெரிவித்தார்.

Related Posts