ஆலய கிணற்றுக்குள் இறங்கியவர் மரணம்

வறுத்தலைவிளான் – அன்னம்மார் ஆலயத்திலுள்ள 60 அடி கிணற்றுக்குள் இறங்கியவர், புதன்கிழமை (12) கடற்படையினரால் சடலமாக மீட்டுள்ளார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த இராசன் உதயபாலு (வயது 44) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது தாயாருடன் அன்னம்மார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற குறித்த நபர், அங்கு சாமி வந்து கலை ஆடியுள்ளார். தொடர்ந்து, தான் கிணற்றுக்குள் இறங்கவேண்டும் என்றும், தன்னை அன்னம்மாள் அழைக்கின்றாள் என்றும் கூறியுள்ளார். மற்றவர்கள் மறுத்த போதும், அவர் கட்டாயப்படுத்தியதன் விளைவாக, கயிற்றைக் கட்டிக்கொண்டு அவர் கிணற்றுக்குள் இறங்கினார்.

கிணற்றுக்குள் இறங்கியவர் மயக்கமுற்றதை அவதானித்த மேலிருந்த சிலர், கிணற்றுக்குள் இறங்க முயற்சித்தபோது, சில அடிகள் இறங்கவே அவர்களுக்கு மயக்கம் வருவது போல் இருந்தமையால், அவர்கள் இறங்கவில்லை.

பின்னர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டு, அவர்களும் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.

தொடர்ந்து, கடற்படையினரின் நீர் மூழ்கி வீரர்கள் அழைக்கப்பட்டு, ஒட்சிசன் சிலிண்டருடன் இறங்கிய வீரர்கள், குறித்த நபரை சடலமாக மீட்டனர்.

கிணற்றில் ஒரு அடி ஆழத்துக்கு மாத்திரமே தண்ணீர் இருந்தாகவும், அதனால், ஒட்சிசன் குறைவாக இருந்தமையால் அவர் உயிரிழந்துள்ளாதாகவும் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts