Ad Widget

ஆரோக்கிய விழா கண்காட்சியில் இயற்கை கிருமிநாசினி உருவாக்கத்தை விளக்கம் சொல்ல யாருமில்லை

மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சியில் இயற்கை முறையில் கிருமிநாசினியை எவ்வாறு உருவாக்குதல் என்பதனை தெளிவுபடுத்த எவரும் இல்லாமையால் விருந்தினர் கோபமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வட மாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாகாண ஆரோக்கிய விழா கண்காட்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் வியாழக்கிழமை (18) முதல் ஆரம்பமாகியது.

இதில் அமிர்த கரைசல் என விவசாயச் செய்கையின் போது, இயற்கை கிருமிநாசினியாகப் பயன்படுத்தத்தக்க கலவையை உருவாக்குதல் தொடர்பான சிறுவிளக்கம் கொடுக்கப்பட்ட பதாகையொன்று இருந்தது. இயற்கை விவசாய முறைக்கு அது பயனுள்ளதாக அமைகின்றது என்ற விதத்தில் அந்தப் பதாகை காணப்பட்டது.

கண்காட்சியைத் திறந்து வைத்த விருந்தினர், இது தொடர்பில் மேலதிக விளக்கத்தை கோரிய போது, அங்கு எவரும் முன்வந்து விளக்கம் கொடுக்கவில்லை.

இதனால், கோபமடைந்த விருந்தினர் ஒருவர், முதலில் நீங்கள் இது பற்றி படியுங்கள். அதன் பின்னர் இவ்வாறு கண்காட்சியில் வந்து சொல்லுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார்.

இயற்கை முறையிலான விவசாய முறையானது தற்போது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக நாடு முழுவதிலும் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts