Ad Widget

ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வு!!! ததேகூட்டமைப்பினருக்கு பிரதமர் உறுதி!

புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த நான்கரை வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமது நிலைப்பாட்டினை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவுபடுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியினுடைய உள் விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது எனவும் நீண்ட காலமாக தொடர்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் யாப்பினை புதிதாக உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் வேட்பாளர் ஒருவருக்குமே தமது ஆதரவு வழங்கப்படும் என்று சம்பந்தனால் கூறப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வினைக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் தரம் உயர்தல் தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று ஏற்கனவே அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் விரைவாக தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் இதன்போது உறுதி அளித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Related Posts