ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலைக்கு செல்லவுள்ள மக்களின் நன்மை கருதி எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மினிபஸ் சங்கங்களின் தலைவர் எஸ்.கெங்காதரன் தெரிவித்தார்.
உலகளாவியறீதியில் இந்துக்களால் எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இத்தினத்தில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் செலுத்தும் இடங்களில் சிறந்த இடமாக கீரிமலை விளங்குவதால் இத்தினத்தில் பெருந்திரளானோர் கீரிமலைக்கு செல்வது வழமை.
இதனால், மக்களின் போக்குவரத்து வசதி கருதி மினி பஸ்கள் பல சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வீதி, சுன்னாகம், அளவெட்டி வழியாகவும் மற்றும் அம்பனை வழியாகவும் இந்த சேவைகள் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையினரின் பஸ் சேவையும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.