தாச்சி விளையாட்டை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், இனந்தெரியாதவாகளின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அளவெட்டியில் இடம்பெற்றுள்ளது.
இதில் மல்லாகம் நீதிமன்றம் வீதியைச் சேர்ந்த சந்திரசேகரம் கொலின்ஸ் (வயது 20), தேவராசா ஜெகநாதன் (வயது23), ஆகியோர் படுகாயமடைந்து முதலில் தெல்லிப்பழை வைத்தியசாலையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
மற்றொரு இளைஞரான சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி கண்ணகி முகாமைச் சேர்ந்த சின்னராசா யூட் அன்ரனி (வயது 23) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பில் இடம்பெற்ற தாச்சிப் போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர்களை மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த நால்வர் கொண்ட குழு ஒன்று வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனினும் இந்த சம்பவத்துக்கான காரணம் தெரியவரவில்லை. இந்தச் சம்பவம் குறித்து தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.