அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது.
அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல் கண்ணாடிகள், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஆகியவற்றை அடித்து நொருக்கியுள்ளனர்.
அதனால் அச்சமடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவல குரல் எழுப்பினர். அதையடுத்து அயலவர்கள் ஒன்று கூட ஆயுத குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் குறித்து சுன்னாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
யாழில் கடந்த காலங்களில் சட்டவிரோத ஆயுத கும்பல்களின் அட்டகாசங்கள் அதிகரித்து காணப்பட்ட போதிலும் யாழ்.மேல் நீதிமன்ற நீதவனாக மா.இளஞ்செழியன் பதவி யேற்ற பின்னர் நீதவானின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக சட்ட விரோத கும்பல்களின் அட்டகாசங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இந் நிலையில் அளவெட்டியில் துப்பாக்கி சகிதம் சட்டவிரோத கும்பலின் நடமாட்டம் காணப்பட்டமை அப்பகுதி மக்களிடத்தே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.