கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பின்னர் அரச சேவைக்காக புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை உருவாக்கவில்லை என்றால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டு மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் என அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 10 ஆயிரம் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
இந்த கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் போது தற்போது காணப்படும் சம்பள வீதம் மாறக்கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியிருந்தது.
எவ்வாறாயினும், கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் போது முரண்பாடுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.