எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக முடிந்தால் கூட்டமைப்பை செயற்படுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளர் அருந்தவபாலன் சவால் விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் சபையில் இனப்படுகொலை செய்த இராணுவத்தை காப்பாற்றும் வகையில் அங்கு சென்று செயற்பட்டுவிட்டு சர்வதேச விசாரணை பொறிமுறை வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்வோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியமை முதலை கண்ணீர் விடும் செயலுக்கு ஒப்பானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை சட்டரீதியாக அமைக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதில் மயக்கமிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.