அரசியல் தலைவர்களுக்கு இந்து சமயப் பேரவை அழைப்பு!

நாட்டில் மற்றைய மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்துக்கள் அரசியல் அநாதைகள் என்ற நிலை காணப்படுகிறது. அதனை மாற்றியமைத்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்து மக்கள் குறை கேள் அரங்கம் ஒன்றை நடாத்துவதற்கு சகல தரப்பினருக்கும் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை அழைத்துவிடுத்துள்ளது.

இந்த அரங்கம் வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அதுதொடர்பில் இந்து சமய பேரவையால், இந்து மத்த்தைப் பின்பற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், இந்து சமய குறைகேள் அரங்கில் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கும் இந்து சமய பேரவையால் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் இந்து சமய பேரவையின் செயலாளர் ஸ்ரீ.சி.சக்திகீரிவன் வெளியிட்டுள்ள செய்திக் குறப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எமது பேரவையால் நடத்தப்படும் கருத்தமர்வில் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து கற்றறிந்தவர்களும் சைவத் தமிழ் ஆர்வலர்களும் இந்துக்கள் அரசியல் அநாதைகளாகவே வாழ்ந்து வருவதாகவே தெரிவிக்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு எமது பேரவை போன்ற அமைப்புக்கள் முனைப்புடன் செயற்படவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பௌத்த மதத்தைக் காப்பாற்ற சிங்கள அரசியல் தலைவர் துணிவுடன் செயற்படுகின்றனர். இஸ்ஸாம் மதத்தைப் பாதுகாக்க முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செயற்பட்டுவருகின்றனர். கிருஸ்தவ மதத்தைக் காப்பாற்ற தமிழ் – சிங்கள அரசியல் தலைவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

எனினும் இந்துக்களைக் காப்பாற்ற எவரும் முன்வராதிருப்பது இந்துக்கள் அரசியல் அநாதைகள் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது என கற்றறிந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே அதுதொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான – காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க இந்து சமய அரசியல் தலைவர்களுடன் மனம்விட்டுப் பேசிவிட்டு எமது செயற்பாடுகளை முன்னெடுப்பது அரசியல் தர்மத்துக்கு அமைவானதாகிவிடுகிறது.

ஆகவே இந்த அழைப்பை ஏற்று எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறும் கருத்துக்கள நிகழ்வில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்குமாறு இந்து சமய அரசியல் தலைவர்களுக்கு அழைப்புவிடுகின்றோம்.

பங்குபற்றும் அரசியல் தலைவர்கள் தமது விவரங்களை வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் 0212226048 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தெரிவித்தால், தங்களது பெயர்களையும் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ள முடியும் – என்றுள்ளது.

Related Posts