Ad Widget

அரசியல் உள்ளிட்ட உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

‘எமது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பது மட்டுமன்றி அரசியல் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை இலக்காகக் கொண்டே இணக்க அரசியலில் தொடர்ந்தும் பயணிக்கின்றோம்’ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.

teachers2

வட மாகாண ஆசிரிய உதவியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழில்வாய்ப்பு உறுதி செய்யப்படும் பட்சத்திலேயே வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி பலப்படுத்த முடியும். அந்த வகையில் எமது எதிர்கால கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில், பாரிய பொறுப்பை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

மாணவர்கள் கல்வியில் விளையாட்டுத் துறைகளில் மட்டுமல்லாது நவீனகாலத்துக்கேற்ப தொழில்நுட்பரீதியாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய முக்கிய கடப்பாடு உங்களுக்கு உண்டு.

தொண்டர் ஆசிரியர்களாக நீங்கள் கடமையாற்றியிருந்த காலப்பகுதியில், உங்களுக்கு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றுத் தருவதில் நான் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

அதற்கப்பால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையிலேயே நியமனங்கள் சாத்தியமானது.

அந்த வகையில்தான் எமது மக்களின் தேவைகளை நாம் இனம்கண்டு அவற்றுக்கான தீர்வினை அரசுடனான நல்லுறவையும் இணக்க அரசியலையும் பயன்படுத்தி சாதித்து வருகின்றோம்.

இவ்வாறானதொரு நிலையில் தான் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கான பொறியியல் மற்றும் விவசாயபீடங்களை கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்நு கொண்டனர்.

Related Posts