Ad Widget

அரசின் புதிய கடன் திட்டங்கள் மக்களின் கஷ்ட நிலையை ஓரளவு போக்கும் : டக்ளஸ் தேவானந்தா

நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஓரளவு கைகொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வரிகள் குறைப்பு, வரி நீக்கம் மற்றும் கடன் திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாணம் அடங்கலாக நாட்டில் அண்மைக்காலமாக பல மாகாணங்கள் கடும் வரட்சிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரம், விவசாய மக்களுக்கென தற்போது அறிமுகஞ் செய்யப்படவிருக்கும் 5 இலட்சம் ரூபா கடன் திட்டமானது எமது விவசாய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

அதே போன்று வீட்டுக் கடன், சூரிய கல கடன், பாடசாலை வாகனங்களுக்கான கடன், தொழில் முயற்சிகளுக்கான கடன், ஊடகவியலாளர்களுக்கான கடன் போன்ற திட்டங்களும் எமது மக்களுக்கு மிகவும் பயனுள்ளவை.

மேற்படி கடன் தொகைகளின் வட்டியில் அதிக விகிதத்தை அரசாங்கம் பொறுப்பேற்றிருப்பதும் பாராட்டத்தக்கதொரு ஏற்பாடாகும்.

அதே நேரம், எமது மக்களின் அன்றாட, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளினதும் செவினங்களை குறைப்பதற்கும் ஏற்பாடுகள் தேவையாகவுள்ளன. இதனையும் இந்த அரசு அவதானத்தில் கொள்ள வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

Related Posts