Ad Widget

அய்லான் மரணம்: இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் அய்லான் குர்தி, அந்தச் சிறுவனின் சகோதரன், தாய் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். துருக்கியின் பொத்ரும் நகரில் கரையொதுங்கிய அய்லானின் படம், ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த விபத்து தொடர்பாக பொத்ரும் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், படகுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததற்காக முவாஃப்கா அலாபஷ் மற்றும் ஏப்ஸம் அல்ஃப்ராத் ஆகிய இருவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆள் கடத்தல் வணிகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. துருக்கியில் வழக்குகள் முடிவதற்கு வழக்கமாக நீண்ட காலம் பிடிக்கும் என்றாலும், தொடங்கிய ஒரு மாதத்துக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது அகதிகள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை துருக்கி தீவிரப்படுத்தியுள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

Related Posts