Ad Widget

அமைச்சர் சுவாமிநாதனின் கருத்தால் மாணவர்களிடையே குழப்பம்!

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தையடுத்து இன்று (புதன்கிழமை) பல்கலைக்கழகம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிடையே உருவாகிய மோதல் சம்பவத்தையடுத்து, மீண்டும் மோதல் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், அனுர பிரியதர்ஷன யாப்பா, மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக பயணம் செய்தனர்.

அமைச்சர்களைச் சந்தித்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர் தலைவர்கள், துணைவேந்தர் ஆகியோர் மீண்டும் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்குமாறு கேட்டதற்கிணங்க, பல்கலைக்கழக நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இதன்போது கருத்து வெளியிட்ட டி.எம். சுவாமிநாதன் ஒருசிலரின் குழப்பமான நடவடிக்கைகளே மோதலுக்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இக்கூற்றை நிராகரித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கடந்த சனிக்கிழமை, எந்தவொரு திட்டமிடலுமின்றி நடந்த சம்பவம் இது எனவும் தெரிவித்தனர்.

இதே கருத்தையே யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விக் கற்கும் சிங்கள மாணவர்களும் தெரிவித்தனர். சிங்கள மாணவர்களை இதுவரை ஒதுக்கிவைக்கும் எந்தவொரு நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்த தரிந்து கருணாரத்ன என்ற யாழ். பல்கலைக்கழ கத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர், சனிக்கிழமை இடம்பெற்றது போல் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது என்றும் உறுதியளித்தார்.

அதேவேளை சிங்கள மாணவர்களுக்கும் அவர்களது கலாசார மற்றும் பாரம்பரியங்களை பின்பற்றும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தரிந்து கருணாரத்ன கேட்டுக்கொண்டார்.

Related Posts