வடமாகாண சபை அமைச்சர்களை நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெறப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கவுள்ளது.
இந்த விண்ணப்பத்தில் வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் 16 உறுப்பினர்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளதோடு, மேலும் சிலர் இன்று கையெழுத்திடவிருப்பதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் அமர்வு யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெறவுள்ளது.
நிர்வாகத் திறனற்ற வடமாகாண அமைச்சர்களை நீக்கி அவர்களுக்குப் பதிலாக பொறுப்புகூறும் சிறந்தவர்களை அமைச்சர்களாக நியமிக்குமாறு கோரி பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
01. பதவிகளிலுள்ள 4 அமைச்சர்களும் மாற்றப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கான பிரதிநிதித்துவம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
02. அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர் பதவிகளில் மாற்றம் கொண்டுவர முடியுமாயின் அதிலும் மாற்றத்தை கொண்டுவருவது அவசியம்.
03. போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் முல்லைத்தீவு முன்னிலை வகிக்கின்றது. எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுப் பதவி ஒன்றுகூட வழங்கப்படவில்லை. எனவே இந்த மாவட்டத்திற்கு ஓர் அமைச்சு வழங்க வேண்டும்.
ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகிறது என்று பிரதி அவைத்தலைவர் குறிப்பிட்டார்.