அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்ற மண்டபத்திலேயே குறித்த சந்திப்பும் நடைபெற்றது.
இதன்போது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியல்சாசனமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெளிவுபடுத்தினார்.
இதன்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெனீவாத் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் வினவியுள்ளார்.
அத்துடன் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் அதிபர் ஒபாமா வினவியதுடன் அவற்றை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் நேற்று முன்தினம் பொறுப்புக்கூறலின் ஒரு அங்கமான காணாமல் போனோர் குறித்த விவகாரங்களை அணுகுவதற்காக அலுவலகம் ஒன்றை அமைக்க எடுத்த தீர்மானம் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.