Ad Widget

அமெரிக்கா, பிரித்தானியா இலங்கைக்கு வாழ்த்து: போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்து

இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் டேவிட் மிலிபான்ட் கோரியுள்ளார்.

1359656972world

தமிழ் புது வருடத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகள் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பொது வாழ்க்கைக்கு ஒத்துழைப்பை வழங்குகின்ற தமிழர்களுக்கு இந்த வேளையில் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.

தொழிற்கட்சி எப்போதும் தமிழ் சமூகத்துடன் நட்புடன் இருந்து வருகிறது. அது தொடரும் என்றும் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. விசாரணைக்கு இலங்கை முழு ஆதரவு வழங்க வேண்டும் – டேவிட் கமரூன்

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பிரிட்டனிலும், இலங்கையிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் இன்று புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மில்லியன் கணக்கான மக்கள் இன்று தமது குடும்பத்தினர், நண்பர்கள், அயலவர்களுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

பிரித்தானியாவில் தமிழ், சிங்கள சமூகங்களின் அற்புதமான பங்களிப்புகளையும் இந்த தருணத்தில் நினைவு கூர வேண்டும். இன்று பலர், வெளிநாடுகளில் உள்ள தமது அன்புக்குரியவர்களை நினைத்து, குறிப்பாக இலங்கையில் உள்ளவர்களை நினைத்து புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை டவுணிங் வீதி இல்லத்தில் சந்தித்த போது, கடந்த கால விவகாரங்களுக்குத் தீர்வு காண அவரது அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு எனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளேன்.

ஆனால், இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணைகளுக்கு முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும், இன்னும் மேலே செல்ல வேண்டும் என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.

இந்த புத்தாண்டு கடந்தகால காயங்களை குணப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகங்களுக்கு இடையில் நெருக்கத்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன். புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான, வளம்மிக்க ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அமெரிக்கவின் புத்தாண்டு வாழ்த்து!

தமிழ் – சிங்களப் புத்தாண்டு சாதக மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் மக்கள், பிறநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அமெரிக்க அரசு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜோன் கெரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts