Ad Widget

அமெரிக்காவில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு: 19 பள்ளிக் குழந்தைகள், ஓரு ஆசிரியர் உட்பட பலர் உயிரிழப்பு

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாகவும்  மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 21பேர் உயிரிழந்துள்ளனர்.ஒவ்வொரு வகுப்பறைகளாக சென்று துப்பாக்கி நபர் துப்பாக்கி சூடு நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நடைபெற்றபோது, அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் படையைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் சற்று தொலைவில் இருந்துள்ளார். அவர்தான், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, விரைந்து சென்று சுட்டுள்ளார் என்று ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி  தெரிவிக்கிறது.

சிபிஎஸ் செய்தியின்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், பாதுகாப்புக்கவச உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே 18ஆம் தேதி, நியூயார்க் பஃபல்லோ பகுதியில் ஒரு மளிகைக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோதும், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்பட்ட சந்தேக நபர், கைத்துப்பாக்கியுடன் பாதுகாப்பு உடை அணிந்திருந்தார்.

இது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். “ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர்.இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Posts