Ad Widget

அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம் – மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாங்கள் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்தோம். இன்று, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள யுகமாகும். இது உண்மையிலேயே வருந்ததக்க விடயமாகும். எனக்கு பரிசொன்றை அண்மையில் வழங்கினார்கள். அதாவது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகைதருமாறு.

நான். அது என்னவென்று பார்த்தேன். பார்த்தபோதுதான் விளங்கியது. நான், அமைச்சு பதவியை கொடுத்தது இலஞ்சமாம். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை ஜனாதிபதி வழங்கியது ஊழலாயின் அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்றும் அவர் கூறினார்.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியானது, அரசியலமைப்பில் எனக்கிருக்கின்ற அதிகாரத்தின் பிரகாரமே வழங்கப்பட்டது. தேர்தல் நிறைவடைந்து மற்றொரு நபர் பதவியேற்கும் வரையிலும் நானே ஜனாதிபதி. இவ்வாறான பகிடிகளைதான் தற்போது பார்க்க முடியும். விசாரணைக்கு உட்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

நான் கூறவில்லை நாங்கள் முழுமையானவர்கள் என்று. எங்களில் சிலர் தவறிழைத்தனர். அவர்களை பாதுகாத்தது தான் நாம் விட்ட பெரும் தவறாகும். சில அமைச்சர்கள் வந்து கதிரையில் அமராமல் கீழே அமர்ந்தனர். அவ்வாறானவர்களே இன்று எதிராக கதைக்கின்றனர். இதுவா நல்லாட்சி , தவறு செய்தவர்களை பாதுகாத்தது தான் நாம் செய்த பெரும் தவறு. இல்லையெனில் நாம் செய்த தவறு ஒன்றுமில்லை என்றும் அவர் கூறினார்.

Related Posts