Ad Widget

அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு : யாழில் அமைச்சர் மனோ

தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு நேற்று (திங்கட்கிழமை) யாழ். ரில்கோ சிற்றி ஹொட்டலில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.’

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,

இந்த நாட்டில் புதிய யுகத்தினை ஆரம்பித்துள்ளோம். மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தின் போது, அரசியல் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியாமல் இருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கவோ, ஊடக மாநாடுகளை நடாத்தவோ முடியாமல் இருந்தது.

கடந்த காலங்களில் ஜனநாயகத்தினை வெளிப்படுத்த முடியாத நிலமை காணப்பட்டது. துப்பாக்கிகள் குண்டுகள் எறிகணைகள், வன்முறைகள் மூலம் நடாத்திக்கொண்டிருந்தோம். தற்போது, துப்பாக்கிகள், குண்டுகள், வன்முறைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். கலந்துரையாடல்களின் மூலம் நாட்டில் சகவாழ்வினை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இனங்கள் மத்தியில் ஒற்றுமையினையும் ஐக்கியத்தினையும் ஏற்படுத்த மக்கள் மத்தியில் சமத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். சமத்துவத்தினால் ஐக்கியத்தினை ஏற்படுத்த முனைகின்றோம். சமத்துவம் இல்லாவிடின், ஐக்கியத்தினை ஏற்படுத்த முடியாது. சமத்துவமில்லாமல் வரும் ஐக்கியம் ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே உள்ள ஐக்கியம்.

அநாகரீக தர்மபால சிங்களவர்களே எழுந்து நில்லுங்கள் என கூறிய கூற்றினை மாற்றி இலங்கையர்களே எழுந்து நில்லுங்கள் என்ற கூற்றினை அடையும் நிலைக்கு வந்துள்ளோம். அதற்குள் மூன்று இனத்தவர்களும் உள்ளடக்கப்பட்டு இலங்கையர்களே எழுந்து நில்லுங்கள் என்று கூறும் போது முழு இனத்தவர்களும் எழுந்து நிற்பார்கள். அடுத்தவர்களின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கவும் தேவையில்லை எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கவும் தேவையில்லை.

இந்த அரசாங்த்தில் எல்லாம் நடைபெற்று விட்டன என்று கூற முடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். அரசியல் தீர்வு கிடைத்து விட்டது என்று சொல்ல வரவில்லை. அப்படி சொல்வதற்கு பொய்யனும் அல்ல. முட்டாளும் அல்ல. அப்படி சொல்ல முடியாது. ஆனால், அரசியல் தீர்வினை நோக்கிய நகர்வு இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கட்சியும் இணைந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை தட்டிக் கேட்கின்றோம்.

வன்முறைகளை ஒதுக்கி விட்டு கலந்துரையாடல்களுக்கு இடம்கொடுக்க வேண்டுமென நினைக்கின்றேன். அவ்வாறு நினைக்காவிடின் அடுத்த தலைமுறையினர் வன்முறைகளை கையில் எடுத்து விடுவார்களோ என்ற பயம் இருக்கின்றது. நாட்டில் இன்னொரு வன்முறை இடம்பெற்றுவிடக் கூடாது. மீண்டும் ஒரு யுத்தம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் வந்துவிடக்கூடாது என நினைக்கின்றோம்.

இவ்வாறான வன்முறைகள் இடம்பெறக்கூடாதாயின் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இணைந்து கலந்துரையாடி சமத்துவத்தினை ஏற்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு அதிகார பகிர்வின் மூலம் தான் என்பது திட்டவட்டமாக நடைபெற வேண்டியிருக்கின்றது.

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் நோக்கிய இரண்டு அச்சங்கள் இருக்கின்றன. தனிநாடு கோரி விடுவார்களோ மற்றும் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி ஆயுதப் போராட்டத்தினை மேற்கொண்டு விடுவார்களோ என்ற நிலைப்பாடு இருக்கின்றன. அதே போன்று தமிழ் மக்களுக்கும் சிங்கள் மக்கள் மீது இரண்டு அச்சங்கள் இருக்கின்றன
.
பன்மைத் தன்மை கொண்ட நாடாக சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இரண்டாம் தர பிரஜைகளாக கருதுவார்களாக என்ற அச்சம் நிலவுகின்றது. அந்தவகையில் தான் இந்திய தமிழர்களாக இலங்கைத் தமிழர்களைக் கருதுகின்றார்கள். அதனால் தான் கர்நாடாகாவில் நடைபெற்ற அசம்பாவிதத்தின் போது, தமிழ் நாட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாத சீமான் பழநெடுமாறன் மற்றும் வைகோ உள்ளிட்டவர்கள் எமது தமிழ் மக்களை காப்பாற்ற நினைக்கின்றார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்கான பாதை ஒன்றில் தற்போது பயணிக்கின்றோம். தந்தை செல்வாவிற்கு ஒரு பாதை இருந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் ஒரு பாதை இருக்கின்றது. அதிகார பகிர்வு என்ற இலக்கினை நோக்கிப் பயணித்துக் கொண்டி ருக்கின்றோம். முழுமையாக தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடிய வில்லை. ஆனால், படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். எதிர்கால த்தில் முழுமையாக நிறைவேற்றக் கூடிய சூழ்நிலை ஏற்படுமென எதிர்பார்க்கி ன்றோம் என்றார்.

Related Posts