Ad Widget

அடுத்த வீட்டுக்காரன் அரவணைப்பிலுள்ள மனைவிபோல் இருக்காதீர்கள் ; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை

நடமாடும் சேவைக்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம் என்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

wigneswaran__vick

வடமாகாணசபையால் வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில்,

அரசியல் எமது நிர்வாகத்தைச் சீரழிக்கின்றது. இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது.

அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங் கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும், கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு.

அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்டாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.

கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம். எமக்கு எமது குழந்தைகளே முக்கியம். அவர்களுக்காக இந்தத் தரங்கெட்ட நடவடிக்கைகளையும் கண்காணித்து ஆனால் கவனிப்போடு செயலாற்றி வருவோம்.

நாட்கள் மாறும் சூழல்கள் மாறும். மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன் என்றார்.

Related Posts