Ad Widget

அடுத்த வருடம் காங்கேசன்துறை வரையில் யாழ்.தேவி ரயில் சேவையை கொண்டு வருவோம் – யாழில் ஜனாதிபதி

dmja11“நான் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவியில் தான் வருவேன்” இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றய தினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திலும், வேட்பாளர் அறிமுகத்திலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல ஆண்டுகளாக நீங்கள் பட்ட கஸ்ரம் துக்கம் எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும் அந்த நிலை இனிமேலும் வருவதற்கு இடமளிக்கப் போவதில்லையென்பதுடன் இப்போது நீங்கள் பாதுகாப்பாகவும் பயமில்லமாலும் நிம்மதியாகவும் வாழலாம்.

இப்போது நீங்கள் புதியவர்களாக புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்பதுடன், புதிய எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்து செயற்படலாம். கடந்த 30 வருடகாலம் பின்னோக்கியிருந்த வடபகுதி தற்போது வடக்கின் வசந்தம் மூலம் இந்தப் பகுதி வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றது.

நாம் பல்வேறு அபிவிருத்திகளை இந்தப் பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றோம். அதையாரும் மறக்கமுடியாது. நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்திற்கே அதிகளவு நிதியொதுக்கப்பட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், பாதைப்புனரமைப்பு, கைத்தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்துறைகளையும் மேம்படுத்தும் வகையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் மென்மேலும் முன்னெடுக்கத் தயாகராகவிருக்கின்றோம்.

குறிப்பாக மின்சாரம், வீதிப்புனரமைப்பிற்காக அதிகளவு நிதியினை செலவிட்டுள்ளோம். இருந்த போதிலும் இன்னும் சிலகுறைபாடுகள் இருக்கலாம். அவற்றையும் நாம் விரைவில் நிவர்த்தி செய்வோம்.

வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளும் புத்திஜீவிகளும் மீண்டும் இங்கு வந்து வாழவேண்டுமென்பதுடன் இங்கு வாழும் மக்களுக்காக அவர்களும் சேவை செய்ய வேண்டும். இந்நிலையில் பழையசம்பவங்களை நாம் பேசுவது அர்த்தமும் அல்ல நல்லதுமல்ல நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமான நாடு.

அடுத்த வருடம் காங்கேசன்துறை வரையில் யாழ்.தேவி ரயில் சேவையை கொண்டு வருவோம். இனிமேல் அழிவுகள் வேண்டாம் அபிவிருத்தியே வேண்டும். இனவாதம் வேண்டாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். ஆனால் அப்பாவிமக்களின் பிள்ளைகள் இந்நாட்டில் வாழுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராசா இந்த நாட்டில் பிறந்தவர். பல காலம் அரசியலில் உள்ளார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவரை இந்த தேர்தலில் மறந்து விட்டது. அவருக்கு முக்கிய இடம்கொடுக்கவில்லை ஏனென்று எனக்குத் தெரியும்.

வடமாகாண சபைத் தேர்தலை நாம் வடக்கு மக்களுக்காகவே நடத்துகின்றோம் இதனூடாக வடபகுதி மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அதனூடாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர் என்பதுடன் இங்கு புத்திஜீவிகளோ கல்விமான்களோ இல்லையா என்றும் அதனால் தான் தென்னிலங்கையைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனரா என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி அவர்கள் நான் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவியில் தான் வருவேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் உங்களின் வசந்தம் உங்கள் பிள்ளைகளின் வசந்தம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயேட்சைக்குழுக்களில் பங்கெடுத்திருந்த 6 பேர் இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் ஆளும்கட்சியில் இணைந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, பாவித்திரா வன்னியராட்சி, றெஜினோல்ட் கூரே, பாராளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), அஸ்வர் ஆகியோரும் உடனிருந்தனர்.

Related Posts