Ad Widget

அங்கசேஷ்ட்டை புரிபவர்களால் மாணவிகள் அவதி

வீதியில் சென்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் அங்கசேஷ்ட்டைப் புரிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று யாழ்.நகர வீதியில் ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது.

மேற்படி இருவரையும் இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்டப்போதிலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் பிரத்தியேக வகுப்புக்காக வந்த மாணவிகளே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

யாழ்நகரில் செல்லும் மாணவிகள்மீது இனந்தெரியாத சிலர் அங்கசேஷ்ட்டை புரியும் சம்பங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

க.பொ.த. உயர்தரத்தில் கல்விப் பயிலும் மாணவிகள், பிரத்தியேக வகுப்புகளுக்காக யாழ்.நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கே வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ் வகுப்புகள் நடைபெறுவதால் வீதிகளில் சன நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதாகவும் இதனை கருத்திற்கொள்ளும் விஷமிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து இத்தகைய குற்றத்தை புரிந்துவிட்டு தப்பிச் செல்வதாகவும் இதனால் பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பிவிட்டு தாம் மிகுந்த அச்சத்துடனே வீடுகளில் இருப்பதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, மாணவகளின் பாதுகாப்புக்கு அதிகாரிகள் உத்தரவாதமளிக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts