ஃபேஸ்புக் தனது பங்குகளை 2012ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக அதன் பங்குதாரர்களில் இரு குழுவினர் அதன் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததை அடுத்து அந்த நிறுவனம் இரண்டு வழக்குகளை எதிர்கொள்கிறது.
தமது எதிர்கால வளர்ச்சி குறித்த கவலைகளை ஃபேஸ்புக் மறைத்துவிட்டதாக முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தத் தீர்ப்பு குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் தனது பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்ட சில மாதங்களில் அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் ஏறக்குறைய ஃபேஸ் புக் பங்குகளின் மதிப்பில் சரிபாதி வீழ்ச்சியடைந்தது.
அதேசமயம் ஃபேஸ்புக் பங்குகளை இன்றுவரை தொடர்ந்து வைத்திருப்பவர்கள் கூடுதல் லாபம் சம்பாதித்திருப்பார்கள்.
ஃபேஸ்புக் பங்குகளை வாங்கியதால் தாங்கள் இழப்பை சந்தித்ததாக தெரிவித்திருக்கும் சில பங்குதாரர்கள், தொடுதிரை செல்பேசிகள் உள்ளிட்ட கையடக்க இணைய உபகரணங்களின் அதிகரித்த பயன்பாடு எப்படி ஃபேஸ்புக் வருமானத்தை பாதிக்கக்கூடும் என்கிற கவலைகளை ஃபேஸ்புக் நிறுவனம் தங்களிடம் மறைத்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இத்தகைய பங்குதார்கள் இரண்டு குழுக்களாக இணைந்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எதிரான தமது வழக்குகளை தொடுக்கலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.