கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதன்கிழமை (03) இரவு இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணியண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ரி.வினோதன் (வயது 21) என்பவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் கூறினர்.