வடக்கில் படை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது : இராணுவத் தளபதி

வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று (28) கண்டியில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இராணுவம் தனது 68ஆவது தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் நேற்று கண்டி தலதா மாளிகையில் பௌத்த மத ஆசீர்வாதங்களில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

இன்றைய நிலையில் வடக்கில் இராணுவம் இருப்பது சாதாரணமான ஒரு நிலைப்பாடாகும். அதாவது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்ற மிகப் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், படைத்தளபதிகள் அடங்கலாக இன்னும் பல்வேறுபட்ட ஆய்வுகளினதும் மற்றும் பல தேவைகளினதும் அடிப்படையிலேயே அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் அவசியம் தற்பொழுது கிடையாது என குறிப்பிட்டார். இராணுவத்தினரின் எண்ணிக்கை குறித்து எவரும் எதனையும் கூற முடியாது.

வட மாகாண முதலமைச்சர் வடக்கிலும் கிழக்கிலுமாக 1இலட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லை, அதை நாம் மறுக்கின்றோம். இராணுவத்தினர்களின் எண்ணிக்கை குறித்து சம்பளம் வழங்கும் திறைசேரிக்கும் இன்னும் சிலருக்குமே தெரியும்.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனது கண்டி விஜயம் குறித்து நான் சந்தோசமடைந்தேன், உடன் அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தேன் என இராணுவத் தளபதி அங்கு தெரிவித்தார்.

Related Posts