யாழ்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராக அதிக முறைப்பாடுகள்

யாழ்ப்பாண மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் பதியப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணிப் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கல்வித் திணைக்களத்திற்கும் கல்வி உயர் அதிகாரிகளுக்கும் எதிரான அதிகளவிலான முறைப்பாடுகள் யாழ்.மாவட்டத்திலிருந்து வருவதாக தெரிவித்துள்ள, கனகராஜ் இத்தகைய முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக வினவிய போதே ஆனைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படாமை, பொலிஸாரால் பொது மக்கள் அச்சுறுத்தப்படுகின்ற தன்மை, பொலிஸ் நிலையங்களில் மொழி உரிமை மீறப்படுகின்றமை என இவ்வாறு பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதேவேளை கல்வித் திணைக்களத்திற்கு எதிராகவே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமிருந்தே அதிகளவில் இத்தகைய முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. திணைக்களத் தலைவர்கள், மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.

அதாவது உள்ளுராட்சி மன்றங்களின் நியமனங்கள், கட்டிட அனுமதிகள் என்பன தொடர்பிலே உள்ளுராட்சி மன்றங்களிற்கு எதிரான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் காணிப் பிரச்சனைகள் தொடர்பிலே அதிகளிவிலான முறைப்பாடுகள் மனித உரிமை ஆனைக்குழுவிற்கு கிடைக்கின்றன.

அரச காணிகளைப் பங்கீடு செய்வது தொடர்பிலே இத்தகைய முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு தமக்கு கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் தாம் உரிய விசாரணைகளையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Posts