யாழில் மழை நீர் சேகரிப்பு திட்டம் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொலைநோக்கு சிந்தனையிலான மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீடொன்றில் நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பளிஹகார, மழை நீர் சேகரிப்புத்த தொட்டிக்கான அடிக்கல்லை நாட்டி இந்தத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்தத் திட்டத்தில் வடக்கில் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலில் வேலணை, ஊர்காவற்றுறையில் தலா 200 தொட்டிகளும், மருதங்கேணியில் 50 தொட்டிகளும் அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு தொட்டியும் 76 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் உள்ளுர் மேசன் தொழிலாளர்களின் மூலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மேசன் தொழிலாளர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளன.

ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இலங்கோவன், வேலணை பிரதேச செயலர் திருமதி சதீஸன் மஞ்சுளாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts