கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமானது கொழும்பில் உள்ள ஜெர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு சமாந்தரமான உயர் அங்கீகாரத்தை கொண்ட நிறுவனமாகும். இதனால் கிளிநொச்சியிலுள்ள குறித்த நிறுவனம் தனது சுயாதீன தன்மையை இழக்காது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இயங்கிவரும் இலங்கை ஜேர்மன் தொழில்பயிற்சி நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் தனது சுயாதீனத்துவத்தை இழக்காது. கொழும்பில் உள்ள இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் கிளையாக இயங்குவதால் இந்த நிறுவனத்திற்கு கொழும்பில் உள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கப்படும் தரத்திற்கு சமாந்தரமான உயர்தரமான அங்கீகாரம் வழங்கப்படும்.
அதேபோன்று அதிகளவான மாணவர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கற்கைநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை தற்போது பயிற்சி பெறும் தமிழ், சிங்கள முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 177 தமிழ் மாணவர்களும், 226 சிங்கள மாணவர்களும், 46 முஸ்லிம் மாணவர்களும் கற்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் இவர்கள் கற்கின்றனர்.
நான் கிளிநொச்சியில் குறித்த நிறுவனத்திற்கு சென்று ஆராய்ந்தேன். அங்கே மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக அறிந்தேன்.
இதன்படி வரவு செலவுத் திட்டத்தில் அந்த மாணவர்களுக்கான நலன்புரி விடயங்கள் மற்றும் விடுதி அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம் என்றார்.