முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சுவிஸ்லாந்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இரு பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் கரன் என்ற 38 வயது குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் சுவிஸ்லாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார். இவர் புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவராகும்.
இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் இவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ்லாந்து சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் இறுதிப்போரில் அனைத்து உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இவரது உடலை ஸ்ரீலங்காவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசும் சுவிஸ்லாந்து அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் இவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.