முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதன்கிழமை (28) கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
‘சிவில் பாதுகாப்பு பிரிவிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல்’ என்னும் தலைப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘இலங்கை நாட்டின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட தங்களுக்கு 70 ஆண்டுகளுக்கு மேலாக நீதி வேண்டி போராடும் தமிழ்த் தேசிய இனத்தின் சார்பில் எனது வாழ்த்துக்கள்.
தங்களுடைய ஆட்சிக் காலத்திலாவது தமிழ்த் தேசிய இனம் சிங்கள தேசிய இனத்துடன் தமிழர்களுடைய வரலாற்று ரீதியான சரித்திரபூர்வமான நிலத்தில் தமிழர்களுக்கு உரித்தான இறைமையின் அடிப்படையில் நிலையான தீர்வைப் பெற்று இலங்கை நாட்டின் இணைப்பங்காளிகளாக சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு வழிசமைப்பீர்கள் என்று எனது மக்கள் சார்பாக எதிர்பார்க்கிறேன்.
அந்த எதிர்பார்ப்பும் மாற்றம் வேண்டிய முயற்சியும் தான் தமிழர் வரலாறு காணாத வகையில் திரண்டு வந்து தங்களை இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கு காரணமாக அமைந்தது. அந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் தாங்கள் நல்லெண்ணத்துடன் உழைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் கீழ்வரும் விடயத்தையும் தங்கள் கவனத்துக்கு தருகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முகாமைத்துவப் பயிற்சி என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட இராணுவத் துன்புறுத்தல்களையும் எல்லை மீறிய பயிற்சியையும் தாங்கள் உடன் நிறுத்தியமைக்கும் தேசிய பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பதவிகளை மீளப்பெற்றமைக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
வடக்கு கிழக்கிலே குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பள்ளி செல்லும் 3, 4 வயதுப் பாலகர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்புப்பிரிவு என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படுகின்றார்கள்.
இராணுவம் கொடுக்கும் நீலநிற புடவையைத்தான் கற்பிக்கும் ஆசிரியர்கள் அணியவேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த பச்சிளம் பாலர்களும் இராணுவம் சொல்லும் நிறத்தில் தான் உடைகளை அணிய வேண்டும். இந்த ஆசிரியர்கள் மாதம் இரு தடவை விசுவமடு இராணுவ முகாமுக்கு அழைக்கப்படுவதும், அங்கு அரசியல் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அச்சுறுத்தப்பட்டமையும் மேஜர் ஜெனரல் ரட்ணப்பிரியவின் கட்டளையின் கீழ் நடைபெற்ற விடயங்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
விசேடமாக சின்னஞ்சிறு வயது பாலர்கர்களை பராமரிக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இலங்கை நாட்டில் ஒரு தகுந்த கல்விமுறை இல்லை என்பது வேதனையானது. இலங்கையின் கல்வித்திட்டத்தில் ஒவ்வொரு மாகாணங்களிலும் முன்பள்ளிகளுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் வலய ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களையும் புறந்தள்ளி துப்பாக்கிகளுடனும் இராணுவ சீருடையுடனும் இராணுவத்தினரே நேரடியாக இந்த முன்பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இராணுவ ரீதியாக நடத்துகிறார்கள்.
வடமாகாண சபை இருந்தும் கூட இந்த முன்பள்ளிகள் ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான விடயமாகும். தாங்கள் தயவு கூர்ந்து இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்து பாதுகாப்பு அமைச்சின் கீழ்வரும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் ஊடாக 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களை, மாகாணக்கல்வி அமைச்சின் கீழ் விடுவித்து இதே சம்பளத்தை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களும் தொடர்ந்து பெறக்கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
இராணுவ சீருடைகளுடனும், துப்பாக்கிகளுடனும் இராணுவத்தினர் பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் பிரவேசிப்பதைத் தடுக்க வேண்டும். பச்சிளம் பாலகர்களிடம் துப்பாக்கிகளில் இராணுவப் பிரசன்னங்கள் தொடர்பான பயந்த மனநிலையை மாற்ற வேண்டும். அத்தகைய சூழலே ஆரோக்கியமான கல்விச் செயற்பாட்டுக்கும் அச்சமற்ற எதிர்காலத்துக்கும் வழிவகுக்கும். எனவே இராணுவத்தினர் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையீடு செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரம் கிழக்கு சாயி முன்பள்ளி கட்டடத் திறப்பு விழாவில், அத்துமீறி கலந்து கொண்ட இராணுவத்தினர் தேசிய கொடியோடு இராணுவ படையணி கொடியை ஏற்றிய படங்களைத் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.
இந்த நாட்டின் முதல் மனிதன் என்ற வகையில் இலங்கையிலே எங்குமே இல்லாத இந்த முன்பள்ளிகள் மீதான இராணுவச் செயற்பாட்டை நிறுத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் இதே சம்பளத்துடன் மாகாண அரசினது கல்வி அமைச்சின் கீழ் செயற்பட தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.