வல்வெட்டிதுறையில் இன்று உல்லாச இரட்டைப் படகு ஒன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. உல்லாசப் படகுச் சேவைக்கென (Boating) இப்படக்கானது வல்வையைச் சேர்ந்த நோர்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட நலன்விரும்பி ஒருவரின் முயற்சியால், யாழ்பாணம் காரைநகரைச் சேர்ந்த படகு கட்டுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வல்வை மீன் சந்தைக்கு அருகில் உள்ள பட்டறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்த இரட்டைப் படகு வல்வெட்டித்துறைப் பகுதியில் அமைந்துள்ள கொத்தியால் கடற்கரைக்கு சுபகாரியங்கள் மற்றும் வெள்ளோட்டத்திற்காக எடுத்து வரப்பட்டிருந்தது.
5 புதிய குதிரை வலு வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இந்தப் படகில் சுமார் 15 பேர் வரை சுமார் 1 மணி நேரம் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகானது படகுகளைக் கையாளக்கூடிய வான் பகுதியக் கொண்ட வல்வையின் ஒரு கடற்கரைப் பகுதியான கொத்தியால் கடற்கரைப் பகுதியிலும், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது தொண்டைமானாறு நீரேரிப் பகுதியிலும் இயக்கப்படவுள்ளது.
குறித்த படகின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி வல்வை விளையாட்டுக் கழகத்திற்கும், ஊரணி வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கும், யோகநாயகி கல்வி நிலையத்திற்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.