வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி கடற்பரப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவியால், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞானமூர்த்தி அருளானந்தன் (வயது 53) என்ற மீனவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, பொலிஸாரும் கடற்படையினரும் நடத்திய தேடுதலின் போது, அம்மீனவர் பயணித்த படகு, காங்கேசன்துறையினை அண்மித்த கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
5 பிள்ளைகளின் தந்தையான மேற்படி நபர் செவ்வாய்க்கிழமை (05) இரவு 10 மணிக்கு கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றிருந்தார். வழமைபோல, புதன்கிழமை (06) அதிகாலை மற்றைய மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்பிய போதும், மேற்படி நபர் மட்டும் கரைக்குத் திரும்பவில்லை.
இதனையடுத்து, அச்சம் கொண்ட அவரது மனைவி முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீனவர்களின் 5 படகுகள் மற்றும் கடற்படையினரின் படகுகள் என்பவற்றின் உதவியுடன் தேடுதல் தொடர்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.