தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் இறுதிவரை உழைத்த மாபெரும் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 38ஆவது சிரார்த்த தினம் குருநகரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலையில் திங்கட்கிழமை (09) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
சேர்.பொன் இராமநாதனின் மறைவுக்கு பின் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் ஜீ.ஜீ. இந்நாடு சிங்கள நாடு என்றும் இந்நாடு சிங்களவருக்கே சொந்தம் என்றும் சிங்களத் தலைவர்களிடையே ஒரு எண்ணம் வலுப்பெற்ற நிலையில், சிங்கள மாகாண சபையை பண்டாரநாயக்கா தோற்றுவித்தபோது, சிறுபான்மையினரை ஒதுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியை உணர்த்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், தமிழரைப் பாதுகாக்கும் முறையிலும் தமிழரின் குரலாக இருக்கும் பொருட்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஷை நிறுவினார்.
சிங்களவருக்கும் சிறுபான்மையினருக்கும் நாடாளுமன்றத்தில் சமபலம் இருக்க வேண்டுமென்பதே அவது கோட்பாடாக இருந்தது. தமிழர்களுக்கு வரப்போகும் இடர்களை முன்கூட்டியே அறிந்தபடியால் அவை வராமல் தடுப்பதற்காக இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார் என்றார்.
இந்த நிகழ்வில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண சபை உறுப்பினர்களாக விந்தன் கனகரத்தினம், இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.