மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனிதப் புதைகுழிக்குச் சற்றுத் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மக் கிணற்றிலிருந்து, நேற்றுத் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்ட சிறு எலும்புத் துண்டுகள் இரண்டும், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த மர்மக் கிணறு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுக் காலை, மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், ரனித்தா ஞானராஜா ஆகியோர் மன்றுக்குப் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன் போது அழைக்கப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் மன்றில் பிரசன்னமாகி இருந்ததோடு, மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் டபிள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஷவும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
விசாரணைகளின் பின்னர், மர்மக் கிணற்றைத் தோண்டுவதற்கு, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டதையடுத்து, நேற்றுக் காலை 10.30 மணியளவில் நீதவான் முன்னிலையில் குறித்த கிணற்றைத் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முதலில் குறித்த கிணறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெடிபொருட்கள் எவையும் காணப்படுகின்றனவா என்பது குறித்தும், விசேட அதிரடிப் படையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.
பின்னர் நீதவான் முன்னிலையில் குறித்த மர்மக் கிணற்றைத் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, காலை 10.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குறித்த மர்மக் கிணற்றைத் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, சிறு எலும்புத்துண்டுகள் இரண்டு, அகழ்வின் போது மீட்கப்பட்டன.
பின்னர், இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள், மாலை 5 மணியளவில் இடைநிறுத்தப்பட்டதுடன், இன்றும் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது, மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் டபிள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஷ அழைக்கப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், காணாமல் போன உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், ரனித்தா ஞானராஜா, மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எம்.சபூர்தின், பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் மர்மக் கிணறு தோண்டும் இடத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.