Ad Widget

பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வேண்டும்! -டக்ளஸ்

புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த அரசியல் அமைப்பில், ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல், தேர்தல் முறைமை மாற்றம், தேசிய இனப் பிரச்சினைக்கானத் தீர்வு அடங்களாக அனைத்து விடயங்களும் உள்ளடங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தொனிப் பொருளில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சிகளின் கூட்டத்திற்கமைவாக தனது கட்சி சார்பாக முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இப் பரிந்துரைகளில் மேலும் தெரிவித்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஏற்படுத்தப்படும் புதிய அரசியலமைப்பில், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஷேட அதிகாரங்கள் வழங்கப்பட்டு, தேசிய இனப் பிரச்சினைக்கு வழங்கப்படும் தீர்வு நிரந்தர அரசியல் தீர்வாக அமைய வேண்டும். மத்தியில் இரண்டாவது சபை ஏற்படுத்தப்பட்டு, நியாயமான அரசியல் தீர்மானங்கள் வகுக்கப்படுவதற்கு வழிவகை செய்யவேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்தல். 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் அறியப்பட்டு, அவற்றை நீக்குவதற்கான அரசியல் சட்ட மாற்றங்கள், சட்ட வாக்கங்கள், நிர்வாக சுற்றறிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் சட்டரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை, மீண்டும் மாகாண சபைகளுக்கு கையளிக்கவேண்டும். குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts