சரியான தகவல்களை வழங்கி பொது மக்கள் ஒத்துழைப்பு தந்தால் வடமாகாணத்தில் இருந்து முற்றாக போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை அகற்ற தன்னால் முடியும் என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
வடமாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பாடசாலை மாணவர்களை நோக்கி இந்த வியாபாரம் நகர்கின்றது. இதனை தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையேல் அபின் என்ற போதைப்பொருள் ஊடுருவல் மூலம் சீனா நாடு அன்று வீழ்ந்ததை போன்று வடமாகாணமும் அழிந்துவிடும்.
இதனை நிறுத்த பொதுமக்கள், ஊடகங்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்படவேண்டும். பொலிஸார் சிவில் உடையில் சென்று அவர்களை கைது செய்ய முற்படுகையில் சிவிலுடையிலுள்ள பொலிஸாரை சந்தேகநபர்கள் இனங்கண்டு தப்பித்துவிடுகின்றனர். இதனால் பொலிஸாரின் முயற்சி தோல்வி அடைகின்றது.
பொதுமக்கள் எமக்கு ஒத்துழைத்து சரியான தகவல்களை வழங்க முன்வாருங்கள். அவ்வாறு பொதுமக்கள் பொலிஸாருடன் இணைந்து ஒத்துழைத்தால் வடமாகாணத்தை போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுக்க என்னால் முடியும் என்றார்.