தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் தொடர்பில் வடக்கு மாகாண விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை என மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது உண்மையில் பயிர்களுக்குக் கூடியளவு சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு வெட்டுகிளி இனமாகும். அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம எனுமிடத்தில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டன. இதை நாங்கள் எமது விவசாயத் திணைக்களம் மத்திய விவசாயத் திணைக்களத்தினூடாக பரிசோதித்தோம். இது ஒரு மஞ்சள் புள்ளிகள் கொண்ட ஒருவகை வெட்டுக்கிளி என அறிவித்திருந்தார்கள். இது வழமையாக இலங்கையில் உள்ள ஒரு வகைவெட்டுக்கிளி இனமாகும். அவை பாலைவன வெட்டுக்கிளியல்ல.
இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்த அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளால் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும் அதனை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
குருநாகல் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே காணப்படுகின்றன. தற்போது இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் நாங்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டும்.
பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் வந்தால் அதனை கட்டுப்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பாலைவன வெட்டுக்கிளிகள் வடக்கு மாகாணத்தில் இதுவரை இனங்காணப்படவில்லை. அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தில் குப்பிளான் பகுதியில் ஒரு ஆலயத்திற்கு பின்னால் உள்ள ஒரு செடியில் பத்து பதினைந்து வெட்டுக்கிளிகள் இனங்காணப்பட்டன. எனவே இந்த விடயம் தொடர்பில் அங்குள்ளவர்கள் உடனடியாக விவசாய திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து நாம் அங்கு சென்று பார்வையிட்டபோது அவை இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளிதான்.
அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. பத்திரிகைகள் மூலம் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் பற்றி கேள்விப்பட்டு அச்சத்தின் காரணமாக விவசாயிகள் எமக்கு தெரியப்படுத்தினார்கள். அதேபோல வவுனியா மாவட்டத்திலும் இனங்காணப்பட்டன. எனவே அவை அனைத்தும் இலங்கையில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகள்தான். அவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல.
இந்த வெட்டுக்கிளி தொடர்பான விடயங்களை விவசாய திணைக்களத்தினருக்கு தெரியப் படுத்தினால் மட்டுமே எமது விவசாய போதனா ஆசிரியர்கள் ஊடாக குறித்த வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளியா அல்லது எமது நாட்டில் உள்ள வெட்டுக்கிளியா என்பதை சோதித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
விவசாயிகளின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் எமக்கு அவசியமானது. இலங்கையில் அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளியின் பாதிப்பு என்பது இல்லை என்பதுதான் உண்மை.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களின் பிரதி விவசாயப் பணிப்பாளர்களின் அலுவலங்களின் தொலைபேசி இலக்கங்களை நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல் மத்திய விவசாயத் திணைக்களத்தின் 1920 என்ற தொலைபேசி இலக்கத்தையும் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளோம். எனவே விவசாயிகள் தாங்கள் சந்தேகப்படுமிடத்து தகவலினை தெரியப்படுத்தினால் அவை தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
அதேபோல் பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக விளம்பரப் பதாகைகள் மற்றும் துண்டறிக்கைகளை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவை முடிவுற்ற பின்னர் பொது மக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாட்டினையும் விவசாயத் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது – என்றார்.