யாழ். எழுதுமட்டுவாளில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, இராணுவ தளபதி ஆர்.எம்.தயா ரத்னாயக்க, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மத்திய ஒத்துழைப்பு மையத்தில் படை வீரர்களுக்கான நினைவுக் கல்லினைத் திரைநீக்கம் செய்தார்.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி இராணுவப் படைத் தலைமையகத்தினால் உருவாக்கப்பட்ட சிவப்புப் பறவைகள் எனும் பிரிவின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்தார்.
“சிவப்புப் பறவைகள்” எனப்படும் பிரிவிலுள்ளவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கதைக்கக்கூடியவர்கள் என்பதுடன் அவசர நிலைகளின் போது, தமது ஒலிபெருக்கி பூட்டப்பட்ட சைக்கிள்களில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்கள்’ என கிளிநொச்சி இராணுவ படைத் தலைமையகத்தினர் தெரிவித்தனர்.