பயங்கரவாத தடைச்சட்டம் சட்டபுத்தகங்களிலும் இருக்க கூடாது : சம்பந்தன்

அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு ஒருசிலர் தேவையற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நாவின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள்நிகழாமையை உறுதிசெய்வதற்கான விசேட நிபுணர் பப்லோடிக்ரீப் தலைமையிலான குழுவினர் இன்று கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போதே சம்பந்தன் மேற்கண்ட விடயத்தை ஐ.நா அதிகாரிகளிடம் எடுத்துரைத்தாக சம்பந்தனின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் காணிவிடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர், மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்தும் ஐ.நா அதிகாரிகளை தெளிவுப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர், காணாமல் போனோர்; அலுவலகத்தை அமைப்பதில் அரசாங்கம் காட்டிவரும் தாமதம் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.

அவ்வாறு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டால் அதன் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நிறுவப்பட வேண்டும் எனவும் என திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.

மேலும் அரசியல் கைதிகளின் பிரச்சினை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் சட்டபுத்தகங்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் சர்வதேச சமூகத்திற்கும், ஐ.நாவிற்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை ஐ.நா.உறுதிசெய்ய வேண்டும் என விசேடநிபுணரை சம்பந்தன் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐ.நாவின் விசேடநிபுணர், தனது விஜயத்தின் முடிவில் பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கி அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளதாக கூறினார்.

எனவே இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் ஐ.நா. தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related Posts