Ad Widget

நாடு முழுவதிலும் விளையாட்டு, உடல்நல அபிவிருத்தி திட்டங்கள்

அனைவர் மத்தியிலும் விளையாட்டினை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அரசாங்கம் நாடு முழுவதிலும் விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் இது பற்றி கருத்து தெரிவித்த அவர்,

இவ்வகையில் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை தேசிய விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி வாரமாகவும் 30 ஆம் திகதி தேசிய விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனூடாக பல அபிவிருத்தி தள வேலைகள், விளையாட்டு மைதானங்களை புதுமைப்படுத்துதல் (சிரமதானங்களினூடாக), திட்டங்கள் என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது விளையாட்டில் ஈடுபடல் மற்றும் உடல் நலத்தை மேம்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரட்ண பரணவிதான, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீசன், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்பனாவ, மற்றும் ஊடக நிறுவன பிரதானிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts