தேர்தலை புறக்கணிக்க வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் திட்டம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆளுநரின் அலுவலகம் முன்பாக நேற்று (புதன்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திய போதே இவ்வாறு தெரிவித்தார்கள்.

இது தொடர்பில் அவர்கள் கூறுகையில்,

“கடந்த பல வருடங்களாக நியமனம் பெற்றுத் தருமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்த போதும், எமக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. அரசாங்கம் விதிமுறைகளை மீறி, தெரிவு செய்யப்பட்ட சில தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி அலரி மாளிகையில் 182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது. இந்நியமனம் வழங்கப்படவுள்ளவர்களில் பலர் அரசியல் செல்வாக்கு காரணமாக நியமனம் பெறவுள்ளவர்கள். அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைகளத்தின் கீழ் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து நாமும் எமது குடும்பங்களும் ஏமாற்றப்பட்டு வறுமையில் வாடுகின்றோம். அதனால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புறக்கணித்து, எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுதந்திர தினத்தை புறக்கணித்து கறுப்பு உடையணிந்தும் தலையில் கறுப்புப் பட்டியணிந்தும் போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts