தமிழருக்கு ஆதரவான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் – யாழில் ரமபோஷ!

மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

cm sa meet

இன்று யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் தென்னாபிரிக்கக் குழுவினரை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இலங்கையில் இடம்பெற்றுவரும் தற்போதைய நெருக்கடி நிலைகளுக்கு தீர்வு காண்பதையே நாம் விரும்புகிறோம். இதற்கு தென்னாபிரிக்காவில் கைக்கொள்ளப்பட்டுவரும் இனங்களுக்கு இடையிலான சுமூக உறவு நிலையை உதாரணமாகக் கொள்ளமுடியுமாக இருந்தால், அதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயார் என்றும் ரமபோஷ எம்மிடம் தெரிவித்தார் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

cm sa meet 2

வடக்கு மாகாண சபை நிர்வாக நடவடிக்கைகளை சீரான முறையில் முன்னெடுப்பதற்கு மத்திய அரசு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் விடயத்தையும் அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டினேன். இலங்கை அரசமைப்பின் 18ஆவது திருத்தம் காரணமாக அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே உள்ளன. இதனால் சட்டரீதியாகப் பிரச்சினைகளை அணுகித் தீர்வு காண முடியாதுள்ளது என்றும் நான் அவர்களுக்கு விளக்கினேன்.

இதன்போது பதிலளித்த தென்னாபிரிக்க பிரதிநிதிகள், மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் நாம் செயற்படமாட்டோம் என்று என்னிடம் வாக்குறுதி வழங்கினார் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Related Posts