தனியார் காணியில் விகாரை!: சிவகரனை விசாரணைக்காக கொழும்பு வருமாறு புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு!

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் – மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து, விகாரை அமைப்பது தானா நல்லாட்சி என, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக, திங்கட்கிழமை(25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியதோடு, குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும், எமது நியாயபூர்வமான வேண்டுகைளைப் புறக்கணித்து, எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த திறப்பு விழா நடைபெற்றால், ஜனநாயக ரீதியில் கறுப்பு கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, சிவகரனை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2ஆம் பிரிவில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், சிவகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“விசாரணைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினுடாக இன்று (27) பகல் எனக்கு கிடைத்துள்ளது” என்றார்.

Related Posts