Ad Widget

தடைகள் நீக்கம் தேசிய நல்லிணக்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞையாகும்! ஏனைய தடைகளும் நீக்கப்பட வேண்டும்!

புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் மற்றும் தனி நபர் சிலர் மீதான தடைகள் நீக்கஞ் செய்யப்பட்டுள்ளமை, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் காட்டியுள்ள நல்லெண்ண சமிக்ஞையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பிடி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், 2014ம் வருடம் மார்ச் மாதம் 21ம் திகதி 16 தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனி நபர்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அரசாங்கம் 8 தமிழ் அமைப்புக்கள் மற்றும் 270 தனி நபர்கள் மீதான தடையை நீக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அந்த வகையில், உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருப்பிணைப்புக் குழு, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அவை ஆகிய அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் இச் செயற்பாடானது, புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு மேற்கொண்டு வருகின்ற தேசிய நல்லிணக்க செயற்பாடுகளின்பால் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு இது பெரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளதுடன், புலம் பெயர் உறவுகளின் தேசிய முதலீடுகள் தொடர்பிலும் நல்லதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதே நேரம், ஏனைய அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பில் நிலவிவரும் தடைகளையும் விரைவில் நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts